விரும்பும் பதிவைத் தேடுக !

மறக்களி மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்களி மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

மறக்களி மன்னர்முன் தோன்றும் - பாடல்.37 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால் நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக் கடிகை என்று வழங்கப்படுகிறது !  இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (37).

----------------------------

 

மறக்களி   மன்னர் முன்  தோன்றும்  சிறந்த

அறக்களி  இல்லாதார்க்  கீயுமுன்  தோன்றும்

வியக்களி  நல்கூர்ந்தார்  மேற்றாங்  கயக்களி

ஊரில்  பிளிற்றி விடும்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

 

மறக்களி  மன்னர்  முன்  தோன்றும்;  சிறந்த

அறக்களி  இல்லாதார்க்கு  ஈயும்  முன்  தோன்றும்;

வியக்களி  நல்கூர்ந்தார்  மேல்  தாம் ;  கயக்களி

ஊரில்  பிளிற்றி  விடும்.

 

------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

--------------------

 

செயற்கரிய  செயல்களைச் செய்தமையால்   ஒரு  வீரனுக்கு உண்டாகும் வீரக்களிப்பு, மன்னருக்கு முன்பாக  அவன்  நிற்கும் போது தோன்றும் !

 

ஈகையால் ஏற்படும் அறக்களிப்பு, ஏதுமற்ற வறியவர்களுக்குத்  தன்னால் இயன்றதைத் தருகையில், கொடுப்பவர்களுக்குத்  தோன்றும் !

 

எதிர்பாராத நேரத்தில், தனக்கு ஒன்று கிடைக்கும் போது , வியப்பால் ஏற்படக் கூடிய வியக்களிப்பு,  வறிவர்கள்பால் தோன்றும் !

 

அதுபோல், பேனைப் பெருமாள் ஆக்கி ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துத்  தற்பெருமை பேசும் கயக்களிப்பு  கீழ்மக்களிடத்தின் தான் தோன்றும் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

 

மறக்களி = வீரக்களிப்பு ; மன்னர் முன்  = அரசர்கட்கு முன் ; தோன்றும் = வீரர்கட்கு உண்டாகும் ; சிறந்த அறக்களி = மிக்க ஈகைக் களிப்பு ; இல்லாதார்க்கு = வறிவர்கட்கு ; ஈயும் முன் = ஒன்று கொடுக்குமிடத்து ; தோன்றும் = கொடுப்பார்க்கு உண்டாகும் ; வியக்களி = யாதானும் ஒன்றைப் பெறுகையில் வியப்பால் ஏற்படும் களிப்பு ; நல்கூர்ந்தார்  மேற்றாம் = வறிஞர்கள்பால் உண்டாகும் ; கயக்களி = கீழ்மை இயல்பால் உண்டாகும் களிப்பு ; ஊரில் = இருக்கும் ஊரில் ; பிளிற்றிவிடும் = பலரும் அறிய ஆரவாரித்தலால் உண்டாகும்.

 

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

 

அரசனுக்கு முன்னால் பெரும் போழ்து வீரர்கட்கு வீரக் களிப்பு உண்டாகும்; வறியார்க்கு ஒன்று ஈவதே செல்வர்கட்கு  உண்மையான ஈகைக் களிப்பாம்; ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு  ஏழைகட்கு உண்டு; கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து ஆரவாரம் செய்தலே ஆகும்.

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------