விரும்பும் பதிவைத் தேடுக !

எருதுடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எருதுடையான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2021

எருதுடையான் வேளாளன் - பாடல்.55 - வை.வேதரெத்தினம் உரை !

 

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (55)

-------------------------------

எருதுடையான் வேளாளன், ஏலாதான் பார்ப்பான்,

ஒருதொடையான் வெல்வது கோழிஉருவோடு

அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்

செறிவுடையான் சேனா பதி.

 

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;

ஒரு தொடையால் வெல்வது கோழிஉருவோடு

அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்

செறிவு உடையான் சேனாபதி.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

காடுகழனியை உழுதுப் பண்படுத்திப் பயிர் செய்வதற்கு,  சொந்தமாகத்  தனக்கு உழவு மாடுகளை  வைத்திருப்பவனே  வேளாளன் எனப்படுவான் !

 

ஒருகாலால் பெடையை வயப்படுத்தும் சேவலைப் போல, அனைவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பனே பார்ப்பான் எனப்படுவான் !

 

அழகுத் திருவுருவம் மட்டுமன்றி, குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்து வாழ்வை நடத்திச் செல்லும் வல்லமை படைத்தவளே வாழ்க்கைத் துணைவி எனப்படுவாள் !

 

அதுபோல், தனது படைவீரர்களுடன் இரண்டறக் கலந்து, உண்டு உறைந்து, அவர்களது இன்ப  துன்பங்களில்  பங்கு கொள்பவனே மிகச்சிறந்த தளபதி எனப்படுவான் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

எருது உடையான் = உழவு மாடுகளை உடையவன் ; வேளாளன் = வேளாண்மை செய்யும் உழவன் ஆவான் ; ஒரு தொடையால் = ஒரு காலால் ; வெல்வது = பெட்டை கோழியைத் தன்வயப்படுத்துகின்ற ; கோழி = சேவற் கோழியைப் போல ; ஏலாதான் = எவர் பகையையும் ஏற்றுக் கொள்ளலின்றி யாவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவன் ; பார்ப்பான் = பார்ப்பான் எனப்படுவான் ; உருவோடு = நல்ல உருவ அழகோடு ; அறிவுடையாள் = வாழ்க்கையை நடத்தும் நல்லறிவு உடையவள் ; இல்வாழ்க்கைப் பெண் = இல்வாழ்க்கைக்கு உரிய துணைவி ; சேனை = தனது சேனையோடு ; செறிவு உடையான் = எஞ்ஞான்றும் ஒன்றுபட்டு உடன் உறைதல் உடைவன் ; சேனாபதி = சேனைத் தலைவன் ஆவான் ; என்ப = என்று பெரியோர் கூறுவர்.


----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

உழவு மாடு உடையவன் வேளாளன்; ஒரு காலால் பெட்டைக் கோழியைத் தன்வயப்படுத்தும் சேவலைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பான்; அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணைவி ; சேனையோடு ஒன்றுபட்டு உடன் உறைபவன் சேனாபதி !

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

---------------------------------------------------------------------------------------------