விரும்பும் பதிவைத் தேடுக !

நாக்கினறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாக்கினறிப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

நாக்கினறிப இனியதை மூக்கினான் - பாடல்.78 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (78)

--------------------------------

நாக்கி னறிப இனியதைமூக்கினான்

மோந்தறிப வெல்லா மலர்களும் நோக்குள்ளும்

கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து

எண்னினான் எண்ணப் படும்.

 

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

நாக்கின் அறிப இனியதை; – மூக்கினால்

மோந்து அறிப எல்லா மலர்களும்; நோக்கு உள்ளும்

கண்ணினால் காண்ப அணியவற்றை; தொக்கு இருந்து

எண்ணினால் எண்ணப்படும்.

 

.----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

உண்பதற்கினிய உணவுப் பண்டங்களின் அரிய சுவையை மக்கள் நாவினாற் சுவைத்து அறிவார்கள் !

 

மனங்கவரும் வண்ண வண்ண மலர்களின்  நறுமணத்தை மக்கள் மூக்கினால் மோந்து அறிவார்கள் !

 

காட்சிக்கு இனியதான நேர்த்தி மிக்க பொருள்களின் கவினழகை மக்கள்  கண்களால் கண்டு அறிவார்கள் !

 

உணர்வதற்கு அரிய கருத்துக்களை அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி இருந்து அறிவினால் ஆராய்ந்து அறிவார்கள் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

இனியதை = சுவைக்கு இனியதை ; நாக்கின் அறிப = நாவாற் சுவைத்து அறிவார்கள் ; எல்லா மலர்களும் = எல்லா மலர்களையும் ; மூக்கினான் = மூக்கினால் ; மோந்து அறிப = யாவரும் மோந்து அறிவார்கள் ; அணியவற்றை = காட்சிக்கு அழகான பொருள்களை ; நோக்கு உள்ளும் = பார்வை உண்டென்று கருதப்படும் ; கண்ணினால் காண்ப = கண்ணாற் பார்ப்பார்கள் ; தொக்கு இருந்து = அறிஞர்கள் கூடியிருந்து ; எண்ணினான் = அறிவினால் ; எண்ணப்படும் = உணர்ச்சிகள் ஆராயப்படும்.

 

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

சுவைக்கு இனியதை யாவரும் நாவினாற் சுவைத்து அறிவர் ; மலர் மணங்களை மூக்கினால் மோந்து அறிவர் ; அழகிய பொருள்களைக் கண்ணினால் கண்டு அறிவர் ; உணர்வருங் கருத்துக்களை அறிஞர் ஒன்று கூடியிருந்து அறிவால் ஆராய்ந்து அறிவர்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

---------------------------------------------------------------------------------------------