விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 18 நவம்பர், 2021

கடற் குட்டம் போழ்வர் கலவர் - பாடல்.18 - வை.வேதரெத்தினம் உரை !

 

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப் பெற்ற இலக்கியங்களைத் தவிர்த்து, எஞ்சிய பல இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வகைப்படுத்தப் பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்று தான் நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைப்பதால் இந்நூல் நான்மணிக் கடிகை என வழங்கப்பெறுகிறது !  இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண் (18).

-----------------------------

கடற்குட்டம்  போழ்வர்  கலவர்  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்குந்  -  தோமில்

தவக்குட்டந்  தன்னுடையான்  நீந்தும்  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------------------------------------------

 

கடல்குட்டம்  போழ்வர்  கலவர்;  படைக்குட்டம்

பாய்மா  உடையான்  உடைக்கிற்கும்;  -  தோம் இல்

தவக்குட்டம்  தன்உடையான்  நீந்தும்;  அவைக்குட்டம்

கற்றான்  கடந்து  விடும்.

-------------------------------------------------------------------------------------------

குட்டம் = ஆழம்;  ஆழம் உடைய கடல்

-------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

படகு, தோணி, நாவாய்,  போன்ற மரக்கலம்  உடையவர்கள்  ஆழமான கடலாக இருந்தாலும் கூட, அதன் நீரைப் பிளந்து கொண்டு செல்வார்கள் !

 

காற்று போல் கடிது செல்லும் படைக் குதிரையை உடைய வீரன், பகைவரது படை என்னும் கடலின் கரையை  உடைத்துக் கொண்டு செல்வான் !

 

மனதைத் தன்வயப்படுத்தும் வல்லமை உடையவன், குற்றங் குறைகளற்ற தவம் என்னும் ஆழ்கடலை  நீந்திக் கரையேறுவான் !

 

அதுபோல், தெள்ளத் தெளிவாகக் கல்வி கற்றவன், கற்றறிந்த அறிஞர்கள் நிறைந்த  அவை என்னும் ஆழ்கடலை எளிதில் எதிர்கொண்டு கடந்து செல்வான் !

-------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------------

கலவர் = மரக்கலம் உடையவர்   ; கடல் குட்டம்  =  கடலின் ஆழமான நீரை  ;  போழ்வர்  =  பிளந்து செல்வர்  ; பாய்மா உடையான்  =  காற்று போல் கடிது செல்லும் வலிமையான குதிரையை உடைய வீரன்  ;  படைக்குட்டம்  =  பகைவரது படை என்னும் ஆழ்கடலின் கரையை  ;  உடைக்கிற்கும்  =  போரிட்டு உடைத்து விடுவான்  ;  தன் உடையான்  =  தன் மனதைத் தன்வயப்படுத்தியவன்  ;  தோம் இல்  =  குற்றமில்லாத  ;  தவக்குட்ட  =  தவம் என்னும் ஆழ்கடலை  ;  நீந்தும்  =  நீந்திக் கரையேறுவான்  ;  கற்றான்  =  தெளியக் கற்றவன்  ;  அவைக்குட்டம்  =  கற்றறிவுடையோர் நிரம்பிய  அவை என்னும் கடலை  ;  கடந்துவிடும்  =  எதிர்கொண்டு கடந்து செல்வான்.

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

மாலுமிகள் நீர்க்கடலையும், மறவர் படைக் கடலையும், தற்காப்புடையான் தவக்கடலையும், கற்றான் அவைக் கடலையும் கடத்தல் எளிது !

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),02]

{18-11-2021}

-------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக